Thursday, November 13, 2014

நீரிழிவு நோயாளிகளும் சாதிக்கலாம்

கசப்பான சர்க்கரை! நீரிழிவு நோயாளிகளும் சாதிக்கலாம்

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை கூட தாக்க ஆரம்பித்து விட்டது சர்க்கரை நோய்.
ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் சேரும் போது, அதை நீரிழிவு நோய் என்கிறோம்.
கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ அல்லது சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டுமோ சேர்வதினால், இந்த நோய் வரக்கூடும்.
அறிகுறிகள்
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிகத் தாகம், அதிகப் பசி, உடல் எடை இழத்தல், அதிக சோர்வு, பார்வை மங்கல், அடிக்கடி நோய்க்கிருமிகள் தொற்றுவது, உடற்காயங்கள் மெதுவாக ஆறுவது மற்றும் உள்ளங்கை அல்லது பாதங்களில் மரத்துப்போதல் ஆகியவை.
இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை பார்ப்பது நலம், அறிகுறிகள் ஏதும் இல்லாமல் கூட நோய் தாக்கலாம்.
எனவே வரும் முன்னும், வந்த பின்னர் தொடர் சோதனைகளின் மூலம் உடலை கவனித்துக் கொள்வது அவசியம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு.
இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை, இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம்.
தவிர்க்க வேண்டியவைகள்
சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தி, சிக்கல்களைக் குறைப்பதற்கான டிப்ஸ்
ரத்தச் சர்க்கரை, ரத்தஅழுத்தம், கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு நோய் மருத்துவரைச் சந்தித்து எல்லாம் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்வது.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தச் சர்க்கரை, கொலஸ்ட்ரால் பரிசோதனை செய்துகொள்வது. குறிப்பாக ஹெச்.பி.ஏ.1சி வேல்யு எடுப்பது.
வழக்கமான உடற்பயிற்சி
3 முறை சாப்பிடுவதற்கு பதிலாக, 4-5 முறை சாப்பிடும் முறையை பின்பற்றுவது.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்வது.
புகைப்பிடிப்பதைக் கை விடுவது.
பாதங்களில் நோய்த்தொற்று, கால்ஆணி, காய்ப்பு போன்றவை ஏற்படுகின்றனவா என்று தினசரி கண்காணிப்பது.
கண் விழித்திரையை ஆண்டுதோறும் பரிசோதிப்பது.
6 மாதங்களுக்கு ஒரு முறை சிறுநீரக செயல்பாடு பரிசோதனை செய்துகொள்வது.
வாய் துர்நாற்றம் அடித்தால் பல் மருத்துவரை பார்ப்பது.
நோயை வரும் முன் காப்பது மிக அவசியம், ஆரோக்கியமான உணவு முறைகளின் மூலமும், உடற்பயிற்சியின் மூலம் எந்த நோயையும் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளலாம்.
அதேசமயம் நோய் வந்த பின் துவண்டுவிடாமல் முறையான மருத்துவ ஆலோசனைகளின் பேரில், நமது வாழ்க்கையை கொண்டு சென்றால் வாழ்க்கை சிறக்கும்!!! வெற்றி கிட்டும்!!!


நன்றி
லங்காசிறி 

No comments:

Post a Comment